The greatest thing you'll ever learn is just to love and be love in return.

eden ahbez, 'Nature boy' (1948)


Monday, September 10, 2012

No Country for Old Men - A Review

மெக்கார்த்தியின் நாவலில் ஷிகார் 

ஜேவியர் பார்டெம் 
ஷிகாராக ஜேவியர் பார்டெம் 
2007 ஆம் ஆண்டு வெளியான இந்த அமெரிக்க  திரைப்படத்தின் பெயர் "நோ கண்ட்ரி பார் ஓல்டு மென் "
"கார்மேக் மெக்கார்த்தி" என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய நாவலை மையமாக கொண்டு, இப்படத்தை இயக்கியவர்கள் ஜோயல் மற்றும் ஈத்தன் கோயன் சகோதரர்கள். இவர்களை பற்றி ஹாலிவுட்டில் ஒரு சுவராஸ்யமான விஷயம் சொல்லபடுவது உண்டு. இவர்கள் இருவரிடமும்  அவர்கள்  இயக்கும் திரைப்படத்தின் திரைக்கதையையோ அல்லது காட்சி அமைப்பையோ அல்லது   நடிகர்களின் நடிப்பு எந்தவகையில் அமையவேண்டும் என்று,  எதை கேட்டாலும் ஒரே மாதிரியான பதில் தான் வருமாம். இந்த சகோதரர்களிடையே  தங்களது திரைப்படத்தை பொறுத்தவரையில் மாறுபட்ட கருத்தே இல்லை என்று சொல்கிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் எப்போதெல்லாம் வெளியாகிறதோ , அப்போதெல்லாம் அந்த ஆண்டின் அகாடமி (ஆஸ்கர் ) விருது  அவர்களுக்கு நிச்சயம் என்று அகாடமி வரலாறு சொல்கிறது.
இத்திரைப்படத்திற்கு  சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர்  மற்றும் சிறந்த திரைக்கதைக்கான அகாடமி விருதுகள் கிடைத்தன. "பவ்டா" எனப்படும்  பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் மூன்றும் , இரண்டு கோல்டன்   குளோப்   விருதுகளும் கிடைத்தன.

1980 களில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில்  இப்படத்தின் கதைக்களம் நிகழ்கிறது. மலைகளும், வனாந்தர சமவெளிகளும் நிறைந்த பகுதி இது. மெக்ஸிகோவில் இருந்து போதை பொருள்கள் சர்வ சாதாரணமாக அமெரிக்காவுக்குள் வந்துகொண்டிருந்த காலக்கட்டம்.

வியட்நாம் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரன் மோஸ், ஆளில்லாத வனாந்திர சமவெளியில் வேட்டையாட செல்லும்போது, கடுமையான துப்பாக்கி சண்டையினால் கொல்லப்பட்டு கிடக்கும்  பலரது உடல்களை  காண்கிறான். அதில் இறந்துபோன ஒருவன் வைத்திருக்கும் பெட்டியில் இரண்டு மில்லியன் டாலர்கள் இருப்பதை கண்டு, அதை எடுத்துக்கொண்டு தனது வசிப்பிடத்திற்கு வருகிறான். அன்றிரவு தூக்கம் வராமல், அக்கொலைக்களத்தில் படுகாயம் அடைந்து சாகும்தருவாயில் தன்னிடம் தண்ணீர் கேட்டு மன்றாடிய ஒருவனின் பரிதாப நிலையை கண்டு மனம் பொறுக்காமல், நடுநிசியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு செல்கிறான். ஆனால், தண்ணீர் கேட்ட அந்த மனிதன் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதைக்  கண்டு பதற்றமடைகிறான். மோஸ் நிறுத்தியிருந்த வாகனத்தின் அருகே தற்போது ஒரு வாகனம் வந்து நிற்கிறது.
வாகனத்தில் வந்தவர்கள் துப்பாக்கியால் மோசை நோக்கி சுடுகிறார்கள் . அவர்களிடம் இருந்து திறமையாக தப்பித்து வீட்டுக்கு வருகிறான் மோஸ். போதை பொருள் தாதாக்கள், மோஸ் எடுத்துச் சென்ற இரண்டு மில்லியன் டாலர்களை மீட்க ஆண்டன் ஷிகார் என்பவனை வாடகைக்கு அமர்த்துகின்றனர். இரண்டு மில்லியன் டாலர்கள் இருக்கும் அந்த பெட்டியில் உள்ள ரகசிய சமிஞ்சை கருவியின் மூலம் ஷிகார், மோசை பின்தொடர்கிறான். இதற்கு நடுவே ,குற்றங்கள் மலிந்த அந்த பெருநகரத்தின் இழிவு நிலையை நொந்தபடி அந்நகர ஷேரிப்(காவலதிகாரி) டாம் பெல்( டாமி லி ஜோன்ஸ்) அந்த இருவரையும் தேடி அலைகிறார்.  இறுதியில் யார் வெல்கிறார் என்பதோடு படம் நிறைவடைகிறது.

இந்த திரைப்படத்தின் கதை, வழக்கமான "பூனை - எலியை துரத்தும் கதை " தான். ஆனால், இப்படத்தில் நிறைந்திருக்கும் புத்திசாலித்தனமான காட்சி அமைப்புக்கள் , ஆழமான ஆனால் சிறியதான "நறுக்" உரையாடல்கள், கதாபாத்திரங்களின் அனாயசமான  உடல்மொழி மற்றும் இத்திரைப்படத்திற்கு மிகவும் தேவையான நேர்த்தியான, உன்னத ஒளிப்பதிவு நம்மை திக்குமுக்குக்காடவைக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, இத்திரைப்படத்தில் இசைக்கோர்வை எந்த இடத்திலும்  கிடையாது. சாதாரண சப்தங்கள் மட்டும்தான். உதாரணமாக, கார் விரையும் சப்தம், துப்பாக்கி வெடிக்கும் சப்தம், கதவு திறக்கும் அல்லது உடைபடும் சப்தம் போன்றவைகள்.

மோசை விடாமல் துரத்தும் ஷிகார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஜேவியர் பார்டெம் என்ற ஸ்பானிய நடிகர். ஆங்கிலம் சரளமாக பேச தெரியாத அவர் வன்முறையில் ஆழ்ந்த வெறுப்புணர்வு  கொண்டவர். துப்பாக்கியின் "ட்ரிக்கரை" அவரது வாழ்நாளில் இதுவரை தொட்டதே கிடையாது. ஆனால், இந்த படத்தில், அவரின்  கதாபத்திரம், சிறிதும் உணர்ச்சிக்கு ஆட்படாத, இரக்கமற்ற  ஒரு தொழில்முறை கொலைகாரனை  சித்தரிக்கிறது. அதில் அவர்  தனது மிகச்சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படித்தியிருக்கிறார்  என்பதற்கு, அவருக்கு வழங்கப்பட்ட சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதே சாட்சி. மெக்கார்த்தியின் நாவலில் ஆண்டன் ஷிகாராக வரையப்பட்ட ஓவியத்தை(பார்க்க: படம் 2) வைத்துக்கொண்டு, இரண்டு மாதங்கள் அலைந்ததில், இச்சகோதரரர்களால் ஜேவியர் பார்டெம் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். உண்மையாகவே, இப்பாத்திரப்படைப்பு ஒரு உச்சபட்ச கற்பனைத் திறனின் அடையாளம். அதிலும், சாலையோர வணிக வளாக முதலாளியிடம் ஷிகார் மேற்கொள்ளும் உரையாடல், குண்டுக்காயம் பட்டு, அதற்கான  சிகிச்சைக்காக,  ஒரு காரை வெடிக்க வைத்து, அதன் மீது மற்றோரின் கவனம் குவியும்போது, மருந்துக்களை எடுத்து கொள்வது, "பவுண்டி ஹன்டர்" எனப்படும் பணத்துக்காக
தலைமறைவானவர்களை தேடுபவனான "வெல்ஸ்" என்ற இடை தரகனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் கொல்வது, என்று அவர் பரிமளிக்கும் ஒவ்வொரு காட்சியும் உலகத்தரம்.

இக்கதைக்களம் மேற்கு டெக்ஸாஸ் பகுதியில் நடைபெறுகிறது. அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கன் ஆங்கிலத்தை பேசுவதில்லை. அவர்களது ஆங்கிலம் தென்னமெரிக்க வட்டார வழக்கில் உள்ளதால், நம்மை போன்றவர்கள், இத்திரைப்படத்தில் பேசப்படும் ஆங்கிலத்தை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. எனினும், தமிழ்  நாட்டில்
உள்ளதை போலவே, நெல்லை வட்டார வழக்கில் பேசும் ஒருவரை சென்னையில் சற்று உன்னிப்பாக கவனித்து பேசுவதை போல, சிறிது கூடுதல் கவனம் செலுத்தி பார்த்தாலே போதுமானது.

ஆள் அரவமற்ற சமவெளியில், கடுமையான துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில், குண்டுக்காயம்பட்டு இறந்துபோன பல மனித உடல்களோடு, நாய்களும் பிணமாக கிடக்கும் ஒரு காட்சி. சுமார் இரண்டு நாட்கள் இடைவெளியில், பல்வேறு கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வந்துசெல்வதை போல அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சிகளை கூர்ந்து கவனித்தால், கலை இயக்குனரின் உழைப்பு அசர வைக்கிறது. எவ்வளவு நுணுக்கமான கலை உணர்வுடன் அந்த சூழல் உருவாகி இருக்கிறது என்பதை என்னும்போது வியப்பேற்படுகிறது. முதல் நாளில் காட்டப்படும் இறந்துபோன  நாயின் ரத்தம் தோய்ந்த முகம், இரண்டாம் நாளில், அழுகி விகாரமாய் மாறுவது முதல், மனித  உடல்களின் நசுங்கிய கோணங்கள் வரை கூடுதல் கவனம் செலுத்தி அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்திருக்கின்றனர்.

நவம்பர், 2007 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் 25 மில்லியன்கள் செலவில் உருவானது.  ஆனால், அத்திரைப்படம் வாரிக்குவித்ததோ 170 மில்லியன்கள். அமெரிக்க சினிமா வரலாற்றில் 5 வது பெரிய வசூல் சாதனை செய்த இப்படம், கோயன் சகோதரர்களின் மிகச்சிறந்த படைப்பாக்கத்தில் ஒன்று. இந்த அரிய திரைப்படத்தை காண வாய்ப்புக்காக காத்திருங்கள் அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.



Saturday, April 28, 2012

A few words about anna centenary library

அழகாய் ரம்மியமாய் இருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். எட்டு மாடியில் உலகத்தரம் என்று அடிக்கடி சொல்வார்களே, அந்த தரத்தில் அருமையாய் காட்சி அளிக்கிறது. முழுவதும்  குளிர்ரூட்டபட்ட இம்மாளிகையில் உயர்தரமான நாற்காலிகளும் மேசைகளும் மனம் லயித்து படிக்க தூண்டுகிறது. நமக்கு பிடித்த ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்து கொண்டு கண்ணாடி முகப்பு கொண்ட சுவர் அருகே, சாலையில் கீரிச்சிடும் வாகனங்களை பார்த்தபடியே படிப்பது உண்மையாகவே ஒரு சுகானுபவம். பல்வேறு வகையான புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் குவிந்து கிடைக்கின்றன. தூய்மையை தொடர்ந்து பேணும் ஊழியர்கள், மிகவும் அமைதியான சூழல், நவீனம் என இந்நூலகம் சென்னையின் வரபிரசாதமாக திகழ்கிறது.

Thursday, March 22, 2012

                                சென்னையில் என் புதிய வாழ்க்கை 



நான் ஒரு அதிர்ஷ்ட சாலி என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அது மீண்டும் உறுதி பட்டு இருக்கிறது. என் மனதில், கற்பனையில் இருந்த அதே வாழ்க்கை முறை இப்போது நனவாகி இருக்கிறது. கண்ணும் கருத்துமாய் என்னை கவனிக்கும் மனைவி, ரசனையுடன் சமையலை ருசியாக சமைக்க தெரிந்த மாமியார், காமெடியில் கலக்கும்(!!!) மாமனார் என எனது தற்போதைய வாழ்வு சுவராஸ்யம் மிகுந்தது. 
புதிய மற்றும் தன்னம்பிக்கை நிரம்பிய எண்ணங்கள் என் மனதை தற்போது ஆட்கொண்டுள்ளன. இந்த ஆரம்பம் எனக்கு முக்கியமானது. நான் இதை பயன்படுத்தியாக வேண்டும். தளைகளில் இருந்து மீண்டு வர வேண்டும். நடந்திருப்பது மிகவும் நல்லது. கடவுளுக்கு எனது நன்றி.

Sunday, January 2, 2011

the new angel

செக்கச்சிவந்த பிஞ்சுக்கால்கள். அன்றே கொய்த செர்ரிப்பழமாய் கன்னங்கள். லேசாய் நீர் கோர்த்த, அனைத்தையும் ஊடுருவிப்பார்க்கும் கருநீலக் கண்கள். உதட்டில் எப்போதும் புன்னகையோடு ஆசையாசையாய் பார்க்கவைக்கும் நிர்மல முகம். இவையே emaivasthitha என்ற தேவதையின் அங்க அடையாளங்கள்.
எப்போதும் அழாது, எங்கேயும் விழாது அவள் செய்யும் ஒவ்வொரு அசைவும் அற்புதம்.  இனி இவள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வாள். தத்தி தத்தி நடப்பாள். திக்கித்திணறி பேசுவாள். அவள் அம்மாவை போலவே நடனமும் ஆடுவாள். செல் போனில் கதையலப்பாள். சில்மிஷமும் செய்வாள்.
ஒரு ஒன்பது மாதக்குழந்தையின் உலகம் மிகவும் ரசனை மிகுந்தது. அதனுள் அன்பை தவிர வேறில்லை. இத்தேவதை அன்பின் சாரத்திலேயே  வளர பெருமாளை பிரார்த்திக்கிறேன்.  

Saturday, August 14, 2010

stallone's first movie

stallone in 1983  
sylvester stallone - இன் சமீபத்திய ஆங்கிலப்படத்தின் சில காட்சிகளை நேற்று பார்த்தேன். அப்போது, அவரை பற்றி படித்த சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன. அவர் முன்னொரு காலத்தில்,  நம்முடைய கோடம்பாக்கத்து கலாச்சாரத்தின்படியே, ஹாலிவுட்டில் ஒவ்வொரு  உப்புமா கம்பெனியிலும் ஏறி இறங்கி  சான்ஸ் தேடிக்கொண்டு இருந்தார். அச்சமயத்தில் அவருக்கு கடுமையான பண நெருக்கடி.  தங்கிஇருக்கும் விடுதியின் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நம்புங்கள். அவருக்கு உதவ யாரும் இல்லை. இரவில் பஸ் ஸ்டாண்டில் படுத்து தூங்கி சில நாட்களை கழித்தார். அப்போது, அவருக்கு xxx படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. இருநூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் பெயர் "The party at kitty and stud's"  முழுக்க முழுக்க படு ஆபாசமான அந்த படத்தில் நடித்தது பற்றி stallone இப்படி வேதனையோடு சொல்கிறார். "எனக்கு அப்போது இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று, நான் அந்த மோசமான படத்தில் நடித்து, சம்பளமாக இருநூறு டாலர்கள் பெற்று, எனது பழைய விடுதியிலேயே குடியேறுவது, இரண்டாவது, நியூ யோர்க்கின் புறநகர் பகுதிகளில் கத்தி முனையில் வழிப்பறி செய்வது. நான் முதலாம் வழியை தேர்ந்தெடுத்தேன்,".
இது எப்படி இருக்கு?

Friday, August 13, 2010

the unscrupulous foolish soldiers

ஹாலிவுட் படங்களில் வரும் அதிபுத்திசாலியான ஹீரோக்கள் அல்ல இவர்கள்.
பெரும்பாலான ஆங்கில படங்களில் வரும் மனிதநேயம் மிக்க கதாநாயகர்களும் அல்ல. இவர்கள் அடிமுட்டாள்கள். உலகைக் காக்க வந்த ரட்சகர்கள் இவர்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள். சாதாரண
காமெராவை A K 47 என்று அப்பாச்சி எனப்படும் அதிநவீன ஹெலிகோப்டேரில் பறந்துகொண்டே  கண்டுபிடிக்கும் அறிவாளிகள்.  இவர்களின்  அட்டுழியங்களை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். shaanhindu@gmail.com